சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத் போலீசாரின் அதிரடி விசாரணையின்போது பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
சித்ரா-ஹேம்நாத் இருவரும் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன் பின்னர் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். ஹேம்நாத் தனது சந்தேகப் பார்வையை மனைவி சித்ரா மீது திருப்பினார்.
அனைவரிடமும் சகஜமாக பேசும் சித்ராவிடம் அடிக்கடி எந்த நடிகருடன் நெருக்கமாக இருந்தாய், எந்த நடிகருடன் ஆட்டம் போட்டாய் என எனக்கு தெரியும்.
எனக்கு தெரியாத விசயங்களை மறைக்காமல் என்னிடம் சொல் என பல கேள்விகள் கேட்டு சித்ராவை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார்.
அதுமட்டுமின்றி படப்பிடிப்பு நடக்கும் தளத்திற்கு திடீரென சென்று தகராறு செய்வதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார். சித்ரா இறப்பதற்கு முன்பு அவர் நடித்த நாடகத்தில் சக நடிகருடன் நெருக்கமான காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தது.
இதனை வைத்தும் சித்ராவிடம் ஹேம்நாத் தகராறில் ஈடுபட்டு இருக்கிறார். இதனால் சித்ரா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
சம்பவம் நடந்த அன்று கடைசியாக நடந்த படப்பிடிப்பிற்கு சென்ற ஹேம்நாத், சித்ராவை ஓட்டலுக்கு காரில் அழைத்து வரும்போதே வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.
ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஓட்டல் அறைக்கு சென்றவுடன் கடுமையான வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் பேசி உள்ளனர்.
ஒரு கட்டத்தில் சித்ராவிடம், ‘நீ இருப்பதை காட்டிலும் இறப்பதே மேல், செத்துப்போ’ என்று கூறிவிட்டு ஹேம்நாத் ஓட்டல் அறையில் இருந்து வெளியேறியுள்ளார்.
இதன்பின்னரே சித்ரா தற்கொலை முடிவை எடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. கடைசியாக சித்ரா தனது தாய் விஜயாவிடம் பேசி இருக்கிறார் என போலீசார் தெரிவித்தனர்.
மேலும் நடிகை சித்ரா கொரோனா ஊரடங்கால் வருமானம் இல்லாததால் பண நெருக்கடியிலும் சிக்கி இருந்ததாக தெரிகிறது. அவர் திருவான்மியூரில் புதிதாக வீடு கட்டி வருகிறார். புதிய சொகுசு கார் ஒன்றும் வாங்கி இருந்தார்.
மேலும் திருமணத்தையும் ஆடம்பரமாக நடத்த திருவேற்காட்டில் உள்ள பிரபல மண்டபத்தை பதிவு செய்து இருக்கிறார்.
இந்த நிலையில் கணவர் ஹேம்நாத்தும் நெருக்கடி கொடுத்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகினார். ஒரு கட்டத்தில் நடிப்பை நிறுத்த வேண்டும் என்றும் சித்ராவிடம் ஹேம்நாத் கூறியதாக தெரிகிறது.
இதனால் மன வேதனையில் இருந்த சித்ரா கடைசியாக ஓட்டலுக்கு வந்தபோது ஹேம்நாத்திடம் தகராறில் ஈடுபட்டு உள்ளார். அப்போது அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.