வட இந்தியர்கள் மிகவும் விரும்பி உண்ணும் காஷ்மீரி புலாவ் ரெசிபியை, இப்போது உங்கள் சமையலறையில் மிகவும் எளிதாக சமைக்கலாம். கீழ்க்காணும் எளிய செய்முறையை பயன்படுத்தி, சுவையான காஷ்மீரி புலாவ் செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பரிமாறி மகிழுங்கள்!!
தேவையானவை:
- பாசுமதி அரிசி – அரை கிலோ
- நறுக்கிய ஆப்பிள் – ஒரு கப்
- நறுக்கிய பைனாப்பிள் – அரை கப்,
- சீட்லெஸ் கறுப்பு திராட்சை,
- சீட்லெஸ் பச்சை திராட்சை – தலா கால் கப்,
- இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன்,
- பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை – தலா 2,
- பொடியாக நறுக்கிய வெங்காயம் – 50 கிராம்,
- எண்ணெய் – 50 மில்லி,
- நெய் – 100 மில்லி,
- தண்ணீர் – 600 மில்லி,
- உப்பு – சிறிதளவு.
செய்முறை:
அரிசியை 2 தடவை கழுவி, 20 நிமிடம் ஊற வைக்கவும். அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, சூடாக்கி, பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலையை தாளிக்கவும்.
அதனுடன் வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். பிறகு, ஊற வைத்த அரிசியைப் போட்டு, உப்பு சேர்த்துக் கிளறவும். பின்னர், நெய் சேர்த்து, தண்ணீர் வற்றியவுடன் பாத்திரத்தை இறக்கவும்.
பிறகு ‘தம்’ போடவும் (அடுப்பின் மேலே தோசைக்கல்லை வைத்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, மூடிய பாத்திரத்தை தோசைக்கல்லின்மீது வைத்து, 10 (அ) 15 நிமிடங் கள் வேக வைக்கவும்).
பிறகு பாத்திரத்தை திறந்து, சாதத்தைக் கிளறி, ஆப்பிள், பைனாப்பிள், கறுப்பு திராட்சை, சீட்லெஸ் பச்சை திராட்சை சேர்த்துக் கிளறி பரிமாறவும்.